வி4 எண்டர்டெயினர் சார்பில் கடந்த 25 ஆண்டுகளாக ஆண்டுதோறும் சிறந்த நடிகர் - நடிகைகள், சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
26 ஆவது ஆண்டு விருதுகள் வழங்கும் விழா புத்தாண்டு தினத்தன்று மாலையில் சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடந்தது. சிறந்த நடிகர், இயக்கம் முதல் சிறந்த டிசைனர் மற்றும் அச்சகம் உட்பட 80 க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன. V4 என்று அழைக்கப்படும் மக்கள் தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு, சிங்காரவேலு, ரியாஸ் மற்றும் மெளனரவி ஆகிய நான்கு பேரும் மூத்த மக்கள் தொடர்பாளர்கள் ஆதலால் திரைப்படத்துறையைச் சேர்ந்த பெருவாரியான பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கே.பாலசந்தர் , எம்.எஸ்.வி, காக்க ராதாகிருஷ்ணன், ஏ.வி.எம் சரவணன் போன்ற மூத்த சாதனையாளர்கள் முதல் வித்தகன் படத்தில் அறிமுகமான இயக்குனர் பார்த்திபனின் மகன் ராக்கி பார்த்திபன் வரை 200 க்கும் அதிகமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். ராக்கி பார்த்திபனுக்கு சிறந்த அறிமுக நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இயக்குநர் சந்தான பாரதிக்கு எம்ஜிஆர் விருதும், இயக்குனர் பி.வாசுவிற்கு சிவாஜி விருதும், சத்யராஜுக்கு அண்ணா விருதும், பிரபுவுக்கு பெரியார் விருதும் வழங்கப்பட்டன.
“ஆடுகளம்” படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகர் விருதை பெற்றார். “அஞ்சலி” சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். விஜய் நடித்த வேலாயுதம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. “முரண்” படத்தில் நடித்த சேரன், பிரசன்னாவும் விருது பெற்றனர்.
நடிகை சினேகா, சோனியா அகர்வால், நடிகர்கள் கரண், பார்த்திபன், இயக்குநர்கள் டி.பி.கஜேந்திரன், பாண்டியராஜன், ஏ எல் விஜய், சரவணன், வடிவுடையான், ஒய்.ஜி.மகேந்திரன், நடிகை சரண்யா, பொன்வண்ணன், இசை யமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், பாடல் ஆசிரியர்கள் வாலி, விவேகா, ஆகியோரும் விருது பெற்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருது வழங்கப்பட்டது. சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களுடன் வெளிவந்த வெங்காயம் திரைப்படத்தை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார் சிறந்த இயக்குனருக்கான விருதினைப் பெற்றார்.
விழாவில் மக்கள் தொடர்பாளர் மெளனம் ரவியின் உதவியாளர் ராஜ்குமார் எழுதிய ரதிபெண்கள் பயணித்த 51ஆம் எண் பேருந்து என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
விழாவில் லட்சுமண் சுருதியின் இசையில் நடிகர் தனுஷ் கொலைவெறி பாடலை மேடையில் பாடினார். மக்கள் தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு, மௌனம் ரவி, சிங்கார வேலன், ரியாஸ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.