இயக்குனர் சாமி இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைக்க 8 பேர் சேர்ந்து தயாரித்திருக்கும் படம் அக்கா குருவி. புகழ்பெற்ற இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய Children of Heaven என்ற மாபெரும் வெற்றிபெற்ற பெர்ஸியன் திரைப்படத்தின் மறுஉருவாக்கம் தான் அக்கா குருவி. இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படகுழுவினர்கள் பேசியதாவது:
இயக்குனர் அமீர் பேசியபோது,
"Children of Heaven" என்ற திரைப்படம், உலகில் இருக்கக்கூடிய அனைத்து சினிமா ரசிகர்களையும் கட்டிப்போட்ட ஒரு திரைப்படம். மஜித் மஜிதி என்ற இயக்குனர் உலகில் இருக்கக்கூடிய அனைத்து சினிமாவையும் தன் காலடியில் கொண்டு வந்து புரட்சி செய்த ஒரு இயக்குனர். Children of Heaven படத்தை பார்க்காதவர்கள் சினிமாவில் இல்லை. அனைவரும் பார்த்திருப்பார்கள்.
இந்த படத்தை பற்றி இசைஞானி இளையராஜா இது போன்ற படங்களை ஏன் இங்கு எடுப்பதில்லை என்று ஒரு கேள்வியை கேட்டார். கதை வேறு ஒருவருடையது, இயக்கம் மட்டும் தான் நான் என்று சொன்னால், அதற்கு நான் எழுத்தாளரை வைத்தே இயக்கிவிடுவோமே தனியாக இயக்குனர்கள் எதற்கு? என்று இது போன்ற நடைமுறை சிக்கல்கள் உள்ளது.
இது போன்ற கலைப் படங்களை இயக்குவது கத்தி மீது நடப்பது போல் இருக்கும். அந்த படத்தின் தரம் குறையாமல் நம் மண்ணின் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு இயக்க வேண்டும். அதே படத்தை இயக்கி தோல்வியடைந்து விட்டால் இயக்குனர் பெரும் விமர்சனத்திற்கு ஆளாவார்கள்.
இளையராஜா அவர்கள் கேட்ட கேள்வி நியாயமான கேள்வி, இது சாமிக்கு மட்டுமல்ல பல இயக்குனர்களுக்கும் தோன்றியிருக்கும் எனக்கும் தோன்றியது.
Children of Heaven போன்று 20க்கும் மேற்பட்ட படங்கள் ரீமேக் செய்வதற்கு தயாராக உள்ளது. ஆனால், இது போன்ற அச்சுறுத்தல்கள் தான் அதை தடுக்கிறது. ஆனால், அந்த வகையில், மனம் திருந்திய மைந்தனாக சாமி இருக்கிறார். அவரின் முந்தைய படங்கள் சர்ச்சைக்குரிய படங்களாக இருந்ததால் அவர் இந்த பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். அவர் சரியான பாதையை தேர்ந்தெடுத்தாரா என்பதை விட அவர் சரியான படத்தை தேர்வுசெய்துள்ளார் என்பதே மறுக்க முடியாத உண்மை.
இந்த படத்தை பார்த்துவிட்டு யாரும் குறை கூறவே முடியாது. இந்த படத்தை அவர் எவ்வளவு குறைவாக எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தாலும் கூட அந்த படத்தின் தரம் குறையாது. ஏனென்றால், அந்த கதையின் கரு அப்படி. ஆனால் அவர் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளேன். கிளைமாக்ஸ் காட்சியில் சிறிய மாற்றம் செய்துள்ளேன் என்று தெரிவித்தார்.
மிக முக்கியமாக சொல்ல வேண்டிய விஷயம் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வணீக ரீதியாக வெற்றியடைய வேண்டும் என்பது தான்.
இசைஞானி இளையராஜாவின் பாட்டை கேட்கும்போதே அவர் இப்படத்திற்காக என்ன செய்திருப்பார் என்று தெரிகிறது. முதல் முறை கேட்ட பாடலே எனக்குள் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது.
இதையெல்லாம் தாண்டி இசைஞானிக்கான அங்கீகாரம் என்னவென்றால், இயக்குனர் சாமி என்னிடம் ஒரு மின்னஞ்சலை காண்பித்தார். அதாவது இந்த விழாவிற்கு மஜித் மஜிதி வரவேண்டும் என்று ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளனர். ஆனால், அதற்கான செலவுகள் அதிகம் என்ற காரணத்தால் படக்குழுவினர்களால் அவரை அழைத்து வரமுடியவில்லை. அவரை அழைத்து வர நானும் சில வழிகள் சொன்னேன். மஜித் மஜிதியை அழைத்து வந்த பெருமை இதை மன்னனிற்கு சேரும் என்பதாலும், அவரை போன்ற இயக்குனர்கள் வரும் பொழுது இன்னும் ஒரு உத்வேகம் பிறக்கும் என்பதற்காகவும் ஆனால் அது சாத்தியமடையவில்லை.
இருப்பினும் இவர்கள் " அக்கா குருவி " படத்தை அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதை பார்த்த அவர், படம் உங்களின் மண்ணிற்கேற்றவாறு படத்தின் தன்மையும், உணர்வும் குறையாமல் மிக சிறப்பாக உருவாக்கியுள்ளீர்கள். அதிலும் இசை மிகவும் அற்புதம் என்று அவர் தரப்பில் இருந்து படத்தை பாராட்டி மின்னஞ்சலை இந்த குழுவினருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஒரு இசைக்கலைஞன் தமிழக மக்களை மட்டுமல்ல உலகிலுள்ள தமிழ் பேசும் மக்களை மட்டுமல்ல, பெர்சியன் மொழி பேசும் ஒரு இயக்குனரையும் கூட கட்டிப்போட்ட இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது என்பது ஒன்று அல்ல ஐந்து தருவதற்கு கூட தகுதி இருக்கிறது. நாம் தெளிவாக சொல்ல வேண்டியது,.." என்று பேசினார்.
இயக்குனர் இரா.பார்த்திபன், “இந்த படத்தை பற்றி பேசிய குழந்தைகள் தான் உண்மையை பேசியவர்கள். பெரியவர்கள் அனைவருமே ஒருவர் பேசியதை விட மற்றொருவர் சிறப்பாக பேச வேண்டும் என்று நினைப்பார்கள். நான் உட்பட அப்படித்தான். சமீபத்தில் கூட ஒரு படத்தின் விமர்சனங்களின் போது பெரியவர்கள் அனைவரும் அழகாக பேசினார்கள். ஆனால், சிறுவன் ஒருவன் சொன்ன கேடித்தனமான கருத்து தான் வைரல் ஆனது. ஏனென்றால், அவன் சொன்னது மிகவும் யதார்த்தமாக இருந்தது. எதற்காக இதை சொல்கிறேன் என்றால் அது போன்ற குழந்தைகளின் விமர்சனம் தான் இந்த படத்திற்கான சரியான விமர்சனம்.
எதற்காக நல்ல படங்களை இயக்குவதற்கு யாரும் முன்வரவில்லை என்பதற்கு அழகாக பேசினார். நான் 'உள்ளே வெளியே' என்று ஒரு படத்தை இயக்கினேன் அதற்கு காரணம் நான் இயக்கிய 'சுகமான சுமைகள்' படம் தான். நான் அதை குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்பதற்காக மிகவும் ஒழுக்கமாக இயக்கினேன். ஆனால், அதை என் குடும்பம் மட்டுமே பார்த்தது. அந்த படத்தால் நான் 75 லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்தேன். அது நான் சம்பாதித்த பணம் இல்லை. சம்பாதிக்க போகும் பணத்தையும் சேர்த்து போடப்பட்ட பணம். அந்த பொருளாதார பிரச்சனை.. நம் வாழ்க்கையிலேயே விளையாட ஆரம்பித்து விட்டது. எனக்கு தெரிந்து ரஹ்மான் சொல்வது போல் இரண்டு பாதை உள்ளது. ஒன்று காதல் மற்றொன்று வெறுப்பு. அதில் நாம் தேர்தெடுக்க வேண்டியது காதலை தான் என்பார். அது போல, தேர்ந்தெடுத்தலே மிக முக்கியமான ஒன்று என நினைக்கிறேன்.
அதை இயக்குனர் சாமி அவர்கள் தேர்ந்தேடுத்தது CHILDREN OF HEAVEN. அதை விட சிறந்த தேர்வு இசைஞானி இளையராஜா. ஒரு ஏழு நல்ல இதயங்கள் சாமி அவர்களை இயக்குனர்களாக தேர்வு செய்துள்ளனனர்.
இயக்குனர் ஹச்.வினோதும் என்னுடன் உதவி இயக்குனராக சில காலங்கள் பணியாற்றியுள்ளார். அவர் அஜித் அஜித் என்று போகும் சமயத்தில், சாமி மஜித் மஜித் என்று போயிருக்கிறார். அவரின் சோர்விற்கு காரணம் அவர் இயக்குனராக மட்டுமல்லாமல், இப்படத்திற்கு தயாரிப்பாளராக இருப்பதும் ஒரு மிக முக்கிய காரணம். ஆனால், அவர் என்னை விட ஒரு படி மேல் தான். நான் ஒரு செருப்பை வைத்து படம் இயக்கினேன், இவர் இரண்டு ஷூவை வைத்து படம் இயக்கியிருக்கிறார்.
நான் ஒத்த செருப்பு படத்தை இயக்கும் போது எவ்வளவு கஷ்டப்பட்டேனோ, அது வெளியாகி ஓடிடி தளத்திற்கு சென்றவுடன் உலக பெருமையெல்லாம் கிடைத்தது.
இயக்குனர் சாமிக்கு திடம் மிகவும் முக்கியமான ஒன்று. நான் முந்தைய காலத்தில் பல படங்களின் மூலம் சம்பாதித்து இருக்கலாம். ஆனால், நிறைவை தரும் படம் 'இரவின் நிழல்' மட்டும் தான். பாக்யராஜ் சார் படத்தை பார்த்தார். அந்த பாராட்டு என்பது எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காது. அது போன்ற சந்தோஷத்தை சாமி உணருவார். இந்த படம் வெற்றியடையும் ..”என்றார்.
PVR பிக்சர்ஸ் கதிர் பேசியபோது, “மே 6ம் தேதி “அக்கா குருவி” படம் வெளியாகிறது. இது போன்ற நல்ல படங்களை திரையரங்கிற்கு வந்து கண்டு ஆதரவு தெரிவித்தால், மேலும் நல்ல படங்கள் தமிழில் வெளியாகும்..” என்றார்.
ஒளிப்பதிவாளர் உத்பல் வி நாயனார் பேசியபோது, “நான் கேரள மாநிலத்தை சேர்ந்தவன். நான் இது வரை கன்னடம், தமிழ், தெலுங்கு, கொங்கணி, மலையாளம் என 80 படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அதில் முதல் பட வாய்ப்பு தமிழில் தான் கிடைத்தது. என்னை வாழ வைத்தது தமிழ் தான். பார்த்திபன் சாருடன் பணியாற்றியுள்ளேன். இந்த படத்தில் எனக்கு முக்கியமாக இருவர் உதவி செய்தனர். என்னுடைய கலரிஸ்ட் முத்துராஜ் மற்றும் ஹெலிகேம் ஜெகன் ஜெயராம். முத்துராஜ் சார் தேசிய விருதை பெற்றவர். சரத்குமார் சார் நடித்த “சாமுண்டி” தான் என்னுடைய முதல் படம்...” என்றார்.
நடிகர் ஆதி பேசியபோது, “இந்த படத்தின் காட்சிகள் மிகவும் அழகாக இருந்தது. வழக்கமாக நாம் பார்க்கும் படங்கள் ஹீரோவை சுற்றி மட்டுமே இருக்கும். அது போன்ற படங்கள் நமக்கு பழகிவிட்டன. அதற்கு நடுவில் ஒரு கிராமத்தில் இருக்கும் வீட்டில் இரு குழந்தைகளை பற்றிய கதையை சொல்லும் போது எனக்கு அது மிக சுவாரஸ்யமாக இருந்தது. சாமி சார் என் முதல் பட இயக்குனர். “மிருகம்” தான் என்னுடைய முதல் படம். மிருகம் படத்தின் படப்பிடிப்பின் போது இவரை பார்த்தால் சிறிது பயம். அவர் பேசும் தோரணையே கொஞ்சம் கடுமையாக தான் இருக்கும். ஆனால், அவருடன் பழக பழக தான் எனக்கு அவரை பற்றி புரிந்தது. அவருக்கு சினிமாவை தவிர வேறு ஏதும் தெரியாது. சில பேர் உள்ளே அழுக்கை வைத்துக் கொண்டு வெளியில் அழகாக தெரிவார்கள். ஆனால், இயக்குனர் சாமி வெளியில் கொஞ்சம் முரட்டு தனமாக தெரிந்தாலும் அவரின் உள்ளம் அழகு. இவர் என் அண்ணன் மாதிரி எனக்கு ஆதி என பெயர் வைத்தது இவர் தான். படக்குழு அனைவர்க்கும் வாழ்த்துக்கள். இளையராஜா அவர்களின் இசை இதுபோன்ற படங்களுக்கு எப்படி இருக்கும் என்று ட்ரைலர் பார்க்கும் போதே தெரிகிறது. படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்..” என்றார்.
இயக்குனர் சாமி பேசியபோது, “இந்த படத்தை நான் இயக்கியதற்கு ஒரு காரணம் உள்ளது. நான் பொறியாளன் என்றாலும் இலக்கியம் பயின்றேன். பார்த்திபன் , சேரன் இவர்களிடம் பணியாற்றும்போது நான் சத்ய ஜித் ரே போன்று படம் இயக்கத்தான் வந்தேன். அதற்காக பாரதியாரின் புத்தகங்கள் 20 படித்தபின் எனது ஸ்கிரிப்ட்டை எழுதினேன். அதன்பின் “உயிர்” எனும் படத்தை பாசிட்டிவாக தான் எழுதி கதை சொல்ல போனேன். சென்ற அனைத்து இடத்திலும் நிராகரித்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது, என்னுடன் உதவியாளராக இருந்த ஒருவர் “சார் ஸ்கிரிப்ட்டை நெகட்டிவாக மாற்றலாம்” என்று கூறினார்.
நானும் சரி என்று அண்ணி கதாபாத்திரத்தை நெகட்டிவாக மாற்றிய பின் ஐந்து தயாரிப்பாளர்கள் படத்தை எடுக்க முன் வந்தனர். அதன் பின்னரே உயிர் வந்தது. உயிர் படத்தை போல் அடுத்த படத்தை எடுக்க வேண்டாம் என முடிவு செய்து “சதம்” என தந்தை மகனை பற்றிய ஒரு கதை. ஆனால், அது தொடரவில்லை. அதன் பின்னரே “மிருகம்” படத்தை இயக்கினேன். அதாவது கதையை தேர்ந்தெடுக்கும் சூழலில் நான் இல்லை. அமீர், பார்த்திபன் எல்லாம் அவர்களுக்கான கதையை தேர்ந்தெடுக்கும் இடத்தில் உள்ளார்கள்.
நேற்று பார்த்திபன் சாரின் “இரவின் நிழல்” படத்தை பார்த்தேன். அப்போது என்னிடம் 75 ஸ்கிரிப்ட் உள்ளது என்றார். நான் என்னிடம் 150 கதைகள் உள்ளது. என் அலமாரி முழுவதும் கதை தான் இருக்கிறது என்றேன். ஒவ்வொரு தயாரிப்பாளரிடமும் நான் நான்கு அல்லது ஐந்து கதைகளை கூறுகிறேன். அவர்கள் தான் கதையை தேர்ந்தெடுக்கிறார்கள் நான் இல்லை. அதனால் தான் “மிருகம்” இயக்கும் சூழல் உருவானது.
அதற்கு பின் "சரித்திரம்" என ஒரு ஆவணப்படம் இயக்கினேன். அது சிலம்பத்தை பற்றிய ஒரு ஆவணப்படம். மினி பாகுபலி போன்ற ஒரு படைப்பு அது. அதை ஒரு 11 ரீல்ஸ் எடுத்தோம். அதற்காக நிறைய படிக்க வேண்டியிருந்தது. பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு இரண்டு வருடம் கழித்து எடுத்த படம். அதுவும் சரியாக வரவில்லை.
அதன்பின், வயிற்று பிழைப்பிற்காக "சிந்து சமவெளி" படத்தை இயக்கினேன். அது பிழைப்பையே கெடுத்துவிட்டது. அடுத்தது கங்காரு படம் இயக்கினேன். என் பசங்களுக்கு நான் எப்போதும் படங்கள் போட்டு காட்டுவது உண்டு. அப்போது என் மகள் கேட்டால், அப்பா நீங்கள் எப்போதும் அனிமேஷன் படத்தை தான் காட்டுகிறீர்கள். சின்ன குழந்தைகள் நடித்த படங்கள் ஏதும் இல்லையா என்று கேட்டால். நானும் ஏன் இல்லை என்று "CHILDREN OF HEAVEN" படத்தை போட்டு காண்பித்தேன். அப்போது என் அக்காவும் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் மொழி புரியாவிட்டாலும் கூட படத்தை பார்த்து அழுது விட்டார். அவர் தான் "இது போன்ற படங்களை யாரும் இயக்க மாட்டார்களா' என்று கேட்டார். நானும் சரி நான் எடுத்து விடுகிறேன் என்று மஜித் மஜிதி அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி ஆரம்பிக்கப்பட்ட படம் இது.
அதற்கு முக்கிய காரணம் என் தயாரிப்பாளர்கள் தான். எட்டு தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. ஷூவை ஹீரோவாக கொண்ட ஒரு கதையை இயக்க உதவியதற்கு மிக்க நன்றி.
நான் சிந்து சமவெளி படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நீங்கள் இந்த படத்தை ஓட வைத்தால் நான் இது போன்ற படங்களை மட்டும் தான் இயக்குவேன். இல்லையென்றால், என்னுடைய போக்கை மாற்றிக் கொண்டு வேறு விதமான படைப்பை கொடுப்பேன் என்று கூறினேன். நீங்கள் அந்த படத்தை ஓட வைக்கவில்லை. அதனால் நான் இந்த படத்திற்கு மாறி விட்டேன். நீங்கள் "அக்கா குருவி" படத்தை ஓட வைக்கவில்லை என்றால் நான் மீண்டும் உயிர், மிருகம் போன்று மூன்று அல்லது நான்கு மடங்கு சர்ச்சை படத்தை தான் இயக்குவேன். அது எனக்கு கவலை இல்லை உங்களுக்கு தான் கஷ்டம்.
நான் நல்ல படங்கள் இயக்க வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், நான் என்ன மாதிரியான படத்தை இயக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்.
இளையராஜா , ஓரிஜினலை விட நீ எடுத்த படம் படம் சிறப்பாக இருக்கிறது என்றார்.
நேற்று பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தை பார்த்து திகைத்து போனேன். பத்து படத்திற்கான உழைப்பை ஒரே படத்தில் உழைத்த திருப்தி அவரிடம் உள்ளது. படம் நன்றாக வந்துள்ளது, துணிச்சலாக திரையரங்கில் வெளியிடுகிறோம் அனைவரும் ஆதரவு தாருங்கள்..” என்றார்.
திரைப்பட விநியோகஸ்தர் பி.டி.செல்வகுமார், “புதுமைப்பித்தன், புதுமை நாயகன், ப்ரோபஸ்ஸர் என என்ன வேண்டுமெனலாம் சொல்லலாம். ஏனென்றால், பார்த்திபன் மிகவும் போராடி வந்தவர். அவர் இங்கு இருப்பது மகிழ்ச்சி. போராடி ஜெயித்தவர்கள் தான் இறுதி வரை இருப்பார்கள். உதாரணத்திற்கு இயேசு, நபிகள் நாயகம், காந்தி அடிகள், போன்றவர்கள். அப்படிபட்ட ஒரு போராளியாக தான் நான் பார்த்திபனை பார்க்கிறேன். ஆதி யின் தந்தை மற்றும் அவர் அண்ணண் இயக்குனர் சத்யா இருவரும் எனக்கு நீண்ட கால நண்பர்கள். நான் விஜய் படங்களை மார்க்கெட்டிங் செய்து கொண்டிருக்கும் போது மிருகம் படம் விநியோகம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. அப்போது தான் ஆதி உடன் நட்பு உண்டானது. 25 லட்ச ரூபாய்க்கு வாங்கபட்ட படம் 1 கோடி ரூபாயை வசூல் செய்தது. சாமிக்கு மாபெரும் அடையாளத்தையும் கொடுத்த படம் அது. அவரின் ஒவ்வொரு படத்திற்கும் அவருக்கென தனி அடையாளம் உள்ளது.
அவர் இயக்கும் படங்களின் மேல் கவனத்தை கொண்டு வர தான் அவர் ஒரு சில விஷயங்களை செய்கிறார். மற்றபடி நல்ல படைப்பாற்றலை கொண்டவர் தான் சாமி. "அக்கா குருவி" படத்தை வியாபாரத்திற்காக பார்த்தேன். மிக அற்புதமான ஒரு படம். நான் தற்போது சினிமா சம்பந்தபட்ட விஷயங்களுக்கு பெரிதாக வருவதில்லை. சமூக பணி செய்ய துவங்கிவிட்டேன். ஆனால், இந்த படம் அக்கா குருவியை பார்த்த போது கடைசி காட்சிகளில் அழுகை வந்தது. அக்கா குருவி முன்பு, பின்பு என சாமியை பார்க்கும் அளவிற்கு அற்புதமாக இயக்கியிருக்கிறார். இதற்கு முன் சர்ச்சை என சிக்கியிருக்கலாம். ஆனால், இந்த படத்திற்கு பின்பு எப்படி பாலச்சந்தர் அடையாளம் காண்பிக்கபட்டரோ அதே போல் சாமியும் அவருக்கான அடையாளத்தை காணுவார்.
இந்த படத்தின் ஒளிப்பதிவை பார்த்தபோது அந்த கிராமத்திலேயே வாழ்ந்தது போல் ஒரு உணர்வை தந்தது. மேகம், பனிமூட்டம் என அனைத்தையும் அழகாக காட்சி படுத்தியிருக்கிறார். இந்த படத்தில் ஷூ தான் ஹீரோ என்று சொன்னார்கள். என்னை பொறுத்தவரை இந்த படத்தை எடுக்க துணிந்த தயாரிப்பாளர்கள் எட்டு பெரும் தான் உண்மையான ஹீரோக்கள். இதே போல் குழுவாக வந்து நல்ல கலைஞர்களையும், நல்ல படைப்புகளையும் உருவாக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
அண்ணன் தங்கையின் பாசத்தை உறவை அவர்கள் இடும் சண்டைக்கு மத்தியில், தங்கைக்கு ஒரு துன்பம் என்றால் அண்ணன் எப்படி துடித்து போகிறான் என்ற பந்தத்தை அழகாக காட்டும் படம் இது. இதில் நடித்த அனைவரும் மிக சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்தில் நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரங்கள் வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். கோடைகாலம் வந்துவிட்டது, குழந்தைகள் பார்ப்பதற்கு சரியான படம் இது. இந்த படத்தை பார்த்துவிட்டு அனைவரும் முடிந்த அளவிற்கு கருத்துக்களை பதிவிட வேண்டும்..” என்றார்.
முன்னதாக, தயாரிப்பாளர் நடிகர், வி.எஸ்.குமார் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார்.