காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரித்திருக்கும் படம் ‘அட்ரஸ்’. குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் போன்ற சிறந்த படங்களை இயக்கிய இராஜமோகன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்திய நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். அந்த ஊரில் வாழும் மக்களின் வலியை மையாமாக கொண்டு ஒரு தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
இந்நிகழ்வினில் மூத்த தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, “என் மகன் இப்படத்தின் தயாரிப்பாளர். நான் போட்டு வந்த பாதையை என் மகன் பின்பற்றுவான் என நம்புகிறேன். நான் தலைசிறந்த படைப்புகளையே தயாரித்துள்ளேன். என் மகன் தயாரித்துள்ள இப்படமும் நல்ல படைப்பாக இருக்கும். இயக்குநர் இராஜமோகன் என் செல்லபிள்ளை, முழு சுதந்திரம் தந்து இப்படத்தை இயக்க சொன்னேன் நன்றாக இயக்கியுள்ளார். நான் திரைத்துறையில் இருந்த காலத்தில் கதைக்கு மட்டும் தான் முன்னுரிமை கொடுப்போம்.பேசி பேசி திரைக்கதை தயாராக ஒரு வருடம் ஆகும். அடுத்ததாக என் தம்பி ஒரு படத்தை என் அலுவலகத்தில் அப்படி உருவாக்கி வருகிறார். பல நல்ல படைப்புகள் தொடர்ந்து வரும்..” என்றார்.
இயக்குநர் ஏ வெங்கடேஷ் , “இயக்குநர் இராஜமோகனின் ‘அட்ரஸ்’ என்னவென்று சொல்லப்போகும் படம். என்னிடம் ஏய் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். அவர் பல வருடங்களாக இந்த கதையை தயார் செய்து வந்தார். ஒரு முறை என்னிடம் சொன்னார். அந்த கதை என்னை மிகவும் பாதித்தது பல காலமாக அந்தப்படம் எப்போது எடுக்கிறீர்கள் என கேட்பேன், பின் அழகன் தமிழ்மணி தயாரிக்கிறார் என்பதையறிந்து மகிழ்ந்தேன். இப்படத்தில் ஒரு வசனம் வரும், “ஆதார் உனக்கு அட்ரஸ்.. ஆனால் அது எனக்கு வாழ்க்கை..”
இப்படி முழுப்படத்தையும் ஆதார் கார்டை வைத்து மிகப்பிரமாதமாக எடுத்துள்ளார். அழகன் தமிழ்மணி ஐயாவின் மகன் அஜய் கிருஷ்ணா மிக அற்புதமாக படத்தை ஒருங்கிணைத்தார். .” என்றார்.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது, “தமிழ்மணி எவ்வளவு பெரிய தயாரிப்பாளர் ஆனால் அவர் படம் செய்து பல காலம் ஆகிவிட்டது. கொரோனாவிற்கு பிறகு திரையரங்கு நன்றாக இருக்கிறது மக்கள் கூட்டமாக வருகிறார்கள். தமிழ் சினிமா தற்போது நன்றாக இருக்கிறது. அட்ரஸ் மிகப்பெரிய வெற்றி பெறும்..” என்றார்.
தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ்,” தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி எனது மாமா அவர் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தில் இருந்தவர். அவருக்கு இப்போது படம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் சினிமா காதலில் செய்கிறார். இப்போது ஒரு சூழல் இருக்கிறது. சாட்டிலைட் டிஜிட்டல் எல்லாம் சில படங்களுக்கு முதலில் விற்று லாபம் வந்து விடுகிறது. அந்த வகையில் இந்தப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப்படத்தை ஓடிடியில் விற்க நினைத்தால் அதற்கு என்ன உதவி செய்யவும் நான் தயார். நான் தயாரிப்பாளர் சங்க தலைவராக வந்தால் எல்லாவற்றையும் முறைப்படுத்துவேன். தயாரிப்பாளர் தான் கடவுள். கேரளா தெலுங்கில் அப்படிதான் இருக்கிறது. அட்ரஸ் எனும் இப்படம் பெரிய இடத்தை போய் சேர வேண்டும். தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா எனது மருமகன் நன்றாக வர வேண்டும். சினிமா வாழட்டும் ..” என்றார்.
இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் , “இப்படத்தின் இசை வெளியீடு எப்போது நடக்கும் என்கிற எதிர்பார்ப்பும் ஆர்வமும் எனக்கும், இராஜமோகனுக்கும் அதிகமாக இருந்தது. இது நடக்குமா என்ற சந்தேகத்தை தாண்டி, இப்போது நடந்து கொண்டிருப்பது, எங்களுக்கு சந்தோஷத்தை தாண்டிய ஆச்சர்யத்தை அளித்துள்ளது. இராஜமோகனுக்கும், எனக்குமான பயணம் 2016-ல் தொடங்கியது. இந்த படம் எனது சிறந்த படமாக இருக்கும் என உறுதியாக நான் நம்புகிறேன். இராஜமோகன், எனக்கு அவர் தான் முதல் தேசிய விருதை வாங்கி தருவேன் என எப்போதும் கூறுவார், அது நடந்தால் நன்றாக இருக்கும். இந்த படத்தின் பாடல்களை சினேகன் சிறப்பாக எழுதியுள்ளார். அவ்வளவு அழகாக வந்துள்ளது. மிகவும் புதுமையான கதை, எல்லா இசையமைப்பாளர்களும் விரும்பும் கிராம பின்னணியிலான கதைகளம். கிராமத்தில் தொடங்கி சென்னை கானாவில் பயணிக்கும் ஒரு முழுமையான படமாக ஒரு இசையமைப்பாளருக்கு கிடைப்பது சந்தோஷமான விஷயம். தயாரிப்பாளர் எனக்கு என்ன வேண்டுமோ, அதை அளித்தார். இந்த படம் வித்தியாசமான படம், இதை தியேட்டரில் பார்க்க ஆவலாய் உள்ளேன். எனது கடைசி இரு படங்களும் ஓடிடியில் வெளியான நிலையில் அட் ரஸ் படத்தை தியேட்டரில் பார்த்து ரசிக்க ரசிகர்களுடன் சேர்ந்து நானும் ஆர்வமாக இருக்கிறேன்..” என்றார்
இப்படத்தில் விஸ்காம் படித்திருக்கும் கானா ஹரி, நாயகனின் நண்பனாக அறிமுகமானதோடு, தனது முதல் படத்திலேயே ஒரு முழு கானா பாடலையும் பாடும் வாய்ப்பையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாயகன் இசக்கி பரத் பேசியபோது, “இந்த படத்தை இயக்குனர் பெரிதாக நம்பினார். இந்த படம் எல்லோருக்கும் ஒரு அட்ரஸாக இருக்கும். நான் கோலிசோடா படம் நடித்தேன், பின்னர் நாடோடிகள் 2 நடித்தேன், இரு படத்திற்கும் என் அம்மா என்னுடன் இருந்தார்கள். நான் பெரிய நடிகனாக வேண்டும் என என் அம்மா விரும்பினார். படத்தின் ஒரு கிளிப்பை இயக்குனர் காட்டினார், இதை அம்மா பார்க்க வேண்டும் என நான் விரும்பினேன். அம்மாவிற்கு கேன்சர் இருந்தது, அவர் இறந்துவிட்டார், அவர் என்னை ஆசிர்வாதம் செய்வார் என நான் நம்புகிறேன். கொடைக்கானல் படபிடிப்பின் போது தயாரிப்பாளர் தான் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தார். ரஜினிகாந்த் போன்றவர்கள் நடித்த நிறுவனத்தில் நான் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. நாங்கள் குறிஞ்சி என்ற கிராமத்தில் படபிடிப்பு நடத்தினோம், அது போன்று கிராமம் இருக்கிறதா என பலர் கேட்டனர். நாங்கள் 8 கிமீ நடந்து ஒரு கிராமம் சென்று படபிடிப்பு நடத்தினோம், பலர் அவர்களது கடும் உழைப்பை இந்த படத்திற்கு அளித்துள்ளனர். ..” என்றார்.
தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா, “இந்த மேடைக்கு நான் வர காரணமாய் இருந்த எனது தாய் தந்தைக்கு நன்றிகள். எனது இயக்குநர் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தார். எங்களுக்குள் பல பிரச்சனைகள் இருந்தாலும் அவர் என்னை எங்கேயும் விட்டுகொடுக்கவில்லை. அதே போல் இந்த விழா நாயகன் கிரிஷ் நான் கேட்பதை செய்து கொடுத்தார். எங்களது குழுவின் அயராத உழைப்பினால் இந்த படம் இங்கு வந்துள்ளது.தயாரிப்பாளர் ஆர் கே. சுரேஷ் அன்று ஒரு கையெழுத்து போடவில்லை என்றால் இந்த படம் இவ்வளவு தூரம் வந்திருக்காது..” என்றார்.
இயக்குனர் ராஜ்மோகன், “ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும், ஒவ்வொரு கிராமத்திற்கு ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். நமது நாட்டு பிரதமரிலிருந்து, முதலமைச்சர், வார்டு கவுன்சிலர் வரை நியூஸ் சேனலில் கிராமங்கள் கணினி மயமாகிறது என கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது திருநெல்வேலி வரை உள்ள கிராமங்கள் மட்டுமே, அதை தாண்டிய இடங்கள் கிராமமாக இவர்களுக்கு தெரியவில்லை. கேரளாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையில் ஒரு கிராமம் உள்ளது அந்த கிராமத்திற்கு, 2015-ல் தான் அட்ரஸ் கிடைத்தது. இந்தியாவிற்கும், பங்களாதேஷிற்கும் இடையில் 15,000 பேர் உள்ள ஒரு கிராமம் உள்ளது, அந்த கிராமம் சில வருடங்கள் முன்னரே இந்தியாவுடன் இணைந்தது, இதனை செய்திதாளில் நான் வாசித்தேன். ஒரு உண்மை சம்பவத்தை கற்பனை கலந்து இந்த படத்தில் கூறியுள்ளேன். நம் நாட்டில் பல கிராமங்கள் அப்படி உள்ளது. அப்படி ஒரு கிராமத்தில் 8 கிமீ நாங்கள் நடந்து சென்று படபிடிப்பு நடத்தினோம், நடிகர்களும் அவ்வளவு தூரம் நடந்து வந்து நடித்தனர். பெரிய நடிகர்களுக்கு மட்டும், கொடைக்கானல் அருகில் படபிடிப்பு நடத்தினோம். எங்கு சென்றாலும் , இப்படம் வராது என்றே பலரும் கூறினர். கொரோனா காலத்தில் படப்பிடிப்பு நடத்த முடியாமல் கஷ்டப்பட்டோம். என் மனைவி, குழந்தைகள், இசையமைப்பாளரும் தான் இந்த படம் வரும் என எனக்கு நம்பிக்கையளித்தனர். ஒரு கதை படமாக, அந்த கதை முடிவு செய்ய வேண்டும். எனது கதைக்கு உயிர் இருக்கிறது. அது தான் என்னை இங்கு கூட்டி வந்தது. ஒரு கட்டத்தில் நான் சினிமாவை விட்டு போய் விட்டேன், எனது குருநாதர் விஜய்மில்டன் தான் என்னை அழைத்து, கன்னட படத்தில் என்னை வேலை பார்க்க சொன்னார். அப்போது தான் சிவராஜ்குமாரிடம் என்னை அறிமுகம் செய்து இந்த படம் பற்றி அவரிடம் விஜய் மில்டன் கூறினார். இந்த படம் உருவாக முக்கியமான காரணம் தயாரிப்பாளர் சரவணன் மற்றும் செந்தில் . உதவி இயக்குநர்கள் சம்பளம் இல்லாமல் இந்த படத்தில் வேலை பார்த்தனர். நடிகர் இசக்கி பரத் நன்றாக நடிக்க கூடியவன், பெரும் உழைப்பை அளித்துள்ளான். படத்தின் ஹீரோயின் தமிழ் தெரியாமல் வந்து இப்போது தமிழ் கற்று உள்ளார்.
இந்த நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் நட்புக்காக நடிகர் அதர்வாமுரளி காளி எனும் முக்கிய பாத்திரமொன்றில் நடித்திருக்கிறார். இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பிராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலிசோடா முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.