எம். ஜி. ஆரின் 103 வது பிறந்த நாளில் , முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் சுயசரிதையாக உருவாகி வரும் தலைவி படத்தில், எம்.ஜி.ஆராக நடிக்கும் அரவிந்த்சாமியின் தோற்றத்தை வெளியிட்டார்கள்.
எம். ஜி. ஆரின் பிறந்த நாளில், அவரது கதாபாத்திரத்தை வெளியிடுவது, சினிமாவிலும் அரசியலிலும் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் மனதில் புரட்சித்தலைவர் மற்றும் மக்கள் திலகம் என்கிற அடைமொழியுடன் நீக்கமற நிறைந்துவிட்ட அவருக்கு செலுத்தும் இதயப்பூர்வமான அஞ்சலியாக இருக்குமென கருதுகிறது படக்குழு.
இதுகுறித்து தலைவியின் இயக்குநர் விஜய் கூறியபோது, “தலைவி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வில் எனக்கு கிடைத்த வரம் ஆகும். தமிழ்நாட்டின் இரண்டு ஆகச்சிறந்த ஆளுமைகளின் வாழ்வை நெருங்கி பார்த்து, அதனை திரைவடிவமாக்குவது எவருக்கும் கிடைத்திராத அரிய வாய்ப்பு. இது ஒரு மிகப்பெரிய அனுபவம். இதிலுள்ள மிகப்பெரும் சவால், இப்படத்திற்கு சரியான நடிகர்களை தேர்ந்தெடுப்பதே. நிஜத்தில் வாழ்ந்தவர்களின் தோற்றத்தை பிரதிபலிப்பதுடன், திரையில் அந்த ஆளுமையை மறுவுருவாக்கம் செய்வது மிக அவசியம் ஆகும்.
நடிகை கங்கனா ரனாவத்தை முதல்வர் புரட்சிதலைவி ஜெயலலிதா பாத்திரத்திற்கு தேர்வு செய்த பின், எம். ஜி. ஆரின் பாத்திரத்திற்கு பலரை கருத்தில் கொண்டு முயன்று பார்த்தோம். இறுதியாக அரவிந்த்சாமி மிகப்பொருத்தமானவர் என அவரை தேர்ந்தெடுத்தோம். இன்றும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர் எம். ஜி.ஆர். அவரை திரையில் கொண்டுவருவது எளிதான செயல் அல்ல. அவரைப் பற்றிய அத்தனை தகவல்களையும் திரட்டி அரவிந்த்சாமியை அதேவிதமான தோற்றத்திற்கு மாற்றினோம். எங்களை விட அவர் இந்தக்கதாப்பாத்திரத்தின் மீது அதிக காதல் கொண்டு தன்னை பல விதங்களில் தயார் செய்து கொண்டார்.
திரையில் எம் ஜி ஆர் என்று மூன்றெழுத்தால் அறியப்படும் அந்த ஆளுமைக்கு நியாயம் செய்யும்படியான உழைப்பை நாங்கள் அனைவரும் தருவோம். பாரத ரத்னா வாங்கி, இந்தியாவின் மிகப்பெரும் தலைவராக விளங்கிய எம்.ஜி. ஆரை திரையில் வடிப்பது எங்கள் அனைவரின் பாக்கியம் ..”என்றார்.
Vibri Motion Pictures நிறுவனம் Karma Media Entertainment நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் தலைவி 2020 ஜூன் 26 அன்று திரைக்கு வரவுள்ளது.