உலகிலேயே கொடுமையான திருட்டு ஒரு படைப்பாளியின் அறிவைத் திருடுவது தான். அறிவைத் திருடி கொள்ளை லாபம் பார்ப்பவர்கள் அந்த அறிவுக்கு சொந்தமான படைப்பாளியைக் கண்டுகொள்வதில்லை. இப்படியான அறிவுத் திருட்டு கதைத் திருட்டு என்ற பெயரில் தமிழ்சினிமாவில் நிறைய நடக்கிறது என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கு அறிவர்.. அதை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் தான் “ படைப்பாளன் “ LS தியான் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் S.நடச்சத்திரம் செபஸ்தியான், பிரபுலீன்பாபு, ஆண்டனி ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி,நாயகனாக நடித்துள்ளார் - L.S.பிரபுராஜா இவர் இயக்குநர் தருண்கோபியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
படைப்பாளன் பற்றி கூறும்போது, “முழுக்க முழுக்க சினிமாவில் இயக்குநராகத் துடிக்கும் ஒரு உதவி இயக்குநரின் கதை இது. முன்பெல்லாம் படத்தயாரிப்பாளர்கள் எளிமையான இடத்தில் இருந்து வந்தவர்களாக இருந்தார்கள். இப்போது பெரும்பாலான படங்களை தயாரிப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். கதை கேட்பது கிடையாது, பவுண்டட் ஸ்கிரிப்ட் கொடுங்கள் படித்து விட்டு சொல்கிறோம் என்று கதை வாங்கி கிடப்பில் போட்டு, அலைக்கழிக்கிறார்கள். பிறகு சில நாட்களில் ஒரு பிரபலமான இயக்குநர்களை வைத்து அந்த கதையை படமாக்கி வெளியிடுகிறார்கள்.
அந்த உதவி இயக்குநரின் உழைப்பு, வலிகளிக்கு மதிப்பு கொடுப்பதில்லை. அப்படி கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றிற்கு கதை சொல்லப் போகும் ஒரு உதவி இயக்குநரின் சொந்தக் கதைப் பற்றியும் அவன் சொன்ன கதைப்பற்றியும் தான் இந்த படம். கடவுள் ஒருவனை தண்டிக்க நினைத்தால் அவனை உதவி இயக்குநராக படைத்து விடுவார் என்று சொல்வார்கள். உதவி இயக்குநர்களின் வாழ்வு அத்தகைய துயரம் நிறைந்தது. உதவி இயக்குநராக இருப்பவனுக்கு பெண் கிடைப்பதில் இருந்து வீடு கிடைப்பது வரை பெரும் சங்கடம் தான். மக்களிடையே சினிமா இயக்கு நர் என்றால் மோசமாகவே கருதுகிறார்கள். ஆனால் மக்களை தங்கள் படங்களின் மூலம் மகிழ்விப்பவனே ஒரு படைப்பாளன் தான் அப்படியான வலி மிகுந்த உதவி இயக்குநரின் வலிகளையும் அவனது துயரம் மிக்க வழிகளையும் இப்படம் வெளிச்சம் போட்டுக் காட்ட உள்ளது..” என்றார் L.S.பிரபுராஜா.
மனோபாலா, இயக்குனர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், காக்கா முட்டை ரமேஷ் - விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் வேல்முருகன். கு.கார்த்திக் பாடல்கள் எழுத இசையமைக்கிறார் கிருபாகரன்.