திரையரங்குகளில் தரக்குறைவான புரஜக்டர்கள்! ஏமாற்றப்படும் ரசிகர்கள் - 'ஒஸ்தி' தயாரிப்பாளர் ஆவேச புகார்.
கோடிக்கணக்கில் செலவு செய்து ,சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு அதி நவீன தொழில்நுட்பத்தோடு தரமான படங்களை உருவாக்கினாலும் பெரும்பாலான திரையரங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட தரம் மற்றும் நெறிமுறைகளுக்கு குறைவான புரஜக்டர்களே பயன்படுத்தப்படுவதால் உருவாக்கப்பட்ட தரத்தில் படத்தை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாறும் நிலை இருப்பதாக ஆதங்கப்படுகிறார் 'ஒஸ்தி' பட தயாரிப்பாளர் ரமேஷ் .
தரக்குறைவான புரஜக்டர்களால் ரசிகர்கள் சிறந்த தரத்தில் படங்களை பார்த்து ரசிக்க முடியாமல் போவதோடு கண்களுக்கும் காதுகளுக்கும் பலவிதமான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரிக்கிறார்.
படங்களை திரையிடுவதற்கு என்று உள்ள சர்வதேச நிர்ணயங்களுக்கு ஏற்றதாக இல்லாத தரக்குறைவான புரஜக்டர்கள் பயன்படுத்தப்படுவது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிடப்போவதாகவும் அவர் கூறுகிறார்.
உத்தமபுத்திரன் படத்தை தாயாரித்தவரும் பெரும் பொருட்செலவில் சிம்புவை வைத்து ஒஸ்தி படத்தை தயாரித்து வருபவருமான ரமேஷ் , “இது தொடர்பாக மேலும் கூறுவதாவது. படங்களை திரையரங்குகளில் திரையிடுவதற்கு என்று விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளும் இருக்கின்றன.திரையரங்களில் படங்களை காண்பிக்க குறைப்பிட்ட அளவு துல்லியம் மிக்க புரஜக்டர்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விதிகள் இருக்கின்றன.அதாவது 4கே அளவிலான துல்லியம் கொண்ட புரஜக்டர்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
திரைப்படங்கள் தொடர்பான தொழில்நுட்ப விஷயங்களை நெறிப்படுத்தும் ஹாலிவுட் அமைப்பான எஸ் எம் பி டி ஈ வலியுறுத்தும் இந்த நெறிமுறைகளுக்கு உட்பட்டே திரையரங்குகளில் படங்கள் திரையிடப்பட வேண்டும் .உலகம் முழுவதும் இந்த விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலும் கூட திரைப்படங்கள் தொடர்பான சட்டம் இவற்றை வலியுறுத்துகின்றன.
ஆனால் சமீப காலமாக பல திரையரங்குகளில் இவை பின்பற்றப்படவில்லை என்பது தான் வேதனை.பெரும்பாலான திரையரங்குகளில் 1 கேவுக்கும் குறைவான துல்லியமான காட்சியை தரக்கூடிய புரஜக்டர்களே இருக்கின்றன.முன்னணி திரையரங்களில் சிலவும் இதற்கு விதிவிலக்கல்ல!ஒரு சில மல்டிபிளக்ஸ் அரங்குகளில் ஒரு திரை தவிர மற்றவற்றில் தரக்குறைவான புரஜக்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் ரசிகர்கள் உயர்ந்த தரத்தில் காட்சிகளை பார்க்க முடியாமல் போகிறது.படஙக்ள் புள்ளி புள்ளியாக தெரியலாம்.தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் முதல் போட்டு அதிநவீன தொழில்நுட்பத்தில் படம் எடுத்தாலும் அதன் உண்மையான நோக்கம் நிரைவேறுவதில்லை.காரனம் தரக்குறைவான புரஜக்டர்களால் ரசிகர்கள் உருவாக்கப்பட்ட தரத்தில் படங்களை பார்த்து ரசிக்க முடிவதில்லை.
அது மட்டும் அல்ல, இப்படி தரக்குறைவான முறையில் படங்களைப் பார்ப்பதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுகளை விட கூடுதல் ஒலி அளவால் காதுகள் பாதிக்கப்படலாம். அதிலும் குறிப்பாக குழந்தைகளின் மென்மையான செவிகளுக்கு இவை ஏற்றதல்ல.மேலை நாடுகளில் திரையரங்குகளில் ஒலி அளவை கண்காணிக்க மீட்டர் பொருத்தியிருப்பார்கள்.இங்கு இது பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.
குறிப்பிட்ட சில திரையரங்குகள் தவிர மற்றவற்றில் தரக்குறைவான புரஜக்டர்களே இருக்கின்றன.இந்த புரஜக்டர்கள் திரையரங்குகளில் திரையிட ஏற்றவை அல்ல.கருத்தரங்கு போன்றவற்றில் பயன்படுத்த மட்டுமே உகந்தவை.
ஆனால் திரையிடல் தொழிலை கைக்குள் வைத்திருக்கும் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் இத்தகைய தரக்குறைவான புரஜக்டர்களை விநியோகித்து வருகின்றன.இதனால் ரசிகர்கள் தான் ஏமாற்றப்படுகின்றனர்.
திரையரங்குகளில் விதிமுறை மீறப்படுவது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த நிறுவனங்கள் சார்பில் செல்வாக்கு மிக்க பெண் வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டுள்ளர் என்பது வேதனையானது.
இதில் மேலும் வேதனை என்ன்வென்றால் வங்க தேசம் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இந்த நிறுவனங்கள் தரக்குறைவற்ற புரஜக்டர்களை பயன்படுத்தியதால் வெளியேற்றப்பட்டு விட்டன என்பது தான். ஆனால இந்தியாவில் இவை சுதந்திரமாக செயல்படுகின்றன. இது ஏன்?
சில நிறுவனங்கள் லாப நோக்கிற்காக மோசமான புரஜக்டர்களை விநியோகித்து வருவதால் படம் எடுக்கும் தயாரிப்பளர்களும் பாதிக்கப்படுகின்றனர். ரசிகர்களும் ஏமாற்றப்படுகின்றனர்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட உள்ளேன்.
திரையுலக் பிரமுகர்கள் குறிப்பாக ஃபிக்கி(FICCI) போன்ற அமைப்பில் பொறுப்பில் உள்ளவர்கள் இது குறித்து மவுனமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை.
திரையுலகைக் காப்பாற்ற, ரசிகர்களைப் பாதுகாக்க திரையிடல் தொடர்பான விதிமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமக்குச் சம்பளம் மட்டும் கோடிகளில் வந்தால் போதும், ரசிகன் எப்படியாவது தான் நடிக்கும்-இயக்கும்-தயாரிக்கும் படத்தினைப் பார்த்து விடுவான், அப்பாவி ரசிகனுக்கு 4 K தெரியுமா..? அல்லது அளவுக்கு மீறிய ஒலி இரைச்சலில் அவனது ஆரோக்கியம் கெடுவதுதான் தெரியுமா..? என்கிற மிதப்பில் இத்தனை காலம் இருந்து விட்டவர்கள் மத்தியில், தான் எடுக்கும் தரமான படைப்பினை அதே தரத்தில் சாமான்ய ரசிகனும் கண்டு ரசிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் களத்தில் குதித்திருக்கும் ஒஸ்தி தயாரிப்பாளர் ரமேஷின் இந்த கோரிக்கை சினிமா ஆர்வலர்களுக்கு பெருத்த நம்பிக்கையினைக் கொடுத்திருக்கிறது.
அவரது முயற்சி முழுமையாக வெற்றி பெற www.mysixer.com வாழ்த்துகிறது.
-Vijay Anandh.K