படத்திற்குப் படம் நயன் தாராவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பு கூடியே வருகிறது. ஆனால், நயன் தாரா இரட்டை வேடங்களில் நடிக்கும் ஐரா படத்தின் டீசர் மற்றும் முதல்பார்வைக்கு கிடைத்த அமோக வரவேற்பு நயன் தாராவையே திக்குமுக்காடச் செயுதுள்ளது என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் நேற்று மாலை வெளியான 'மேகதூதம்' பாடல், இசை மற்றும் உணர்ச்சி கூறுகளுக்காகப் பல லட்சம் ரசிகர்களைச் சென்றடைந்திருக்கிறது.
இந்த பாடல் ஏன் 'பவானியின் கீதம்' என்று கூறப்படுகிறது என்பதை இயக்குநர் கே எம் சர்ஜூன் விளக்கும்போது, "இந்த பாடலை ஏற்கனவே கேட்டவர்கள் எளிதாக இதை கண்டுபிடித்திருப்பார்கள் என நம்புகிறேன். 'பவானி' என்ற கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தும் பாடல். அவளுடைய கனவுகள், அபிலாஷைகள், தனக்கு பிடித்த ஆன்மாவுடனான மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்காக ஏங்குவது போன்றவற்றை வெளிப்படுத்தும் படல். பத்மப்ரியா ராகவன், தாமரை, சுந்தரமூர்த்தி ஆகியோரின் சிறப்பான முயற்சிகளை பாராட்டுகிறேன்.
ரசிகர்கள் மனதில் ஆழமாக இறங்கிக் கொண்டிருக்கும் இந்த அழகான பாடலைக் கொடுத்த மூவரையும் பிரித்து பார்க்க முடியாது. தாமரை எப்பொழுதும் உணர்ச்சிகளின் அமுதம், அவரின் பாடல் வரிகள் மூலம் நிபந்தனையற்ற அன்பின் மேன்மையை உயர்த்துவார். பாடல் உருவாக்கும்போது சுந்தரமூர்த்தி பாடல் வரிகளும், குரலும் மிக தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனம் செலுத்தினார். இதனால் மென்மையான இசையை இழைய விட்டிருந்தார், அது தான் பாடலில் தாக்கத்தை தீவிரப்படுத்தியது. பாடலின் வெற்றிக்கு பத்மப்ரியா ராகவனின் பங்கும் மிக முக்கியமானது. காட்சிகளும், பாடலின் சூழ்நிலையும் மற்றும் நயன்தாராவின் பிரம்மாண்டமான திரை ஆளுமையும் பாடலுக்கு கூடுதல் மைலேஜாக இருக்கும் என நம்புகிறேன்" என்றார்.
நயன்தாராவின் நடிப்பைப் பற்றி அவர் கூறும்போது, "இது அவரது 63வது திரைப்படமாகும். படத்தை இயக்கும்போது அவரது நடிப்பை ஒரு ரசிகராகப் பார்த்து வியந்தேன். அவர் தன் நடிப்பைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவை இரு பரிமாணங்களில், குறிப்பாக 'பவானியின்' கதாபாத்திரத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
கலையரசன் மற்றும் யோகிபாபு இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, பிரியங்கா ரவீந்திரன், கதை & திரைக்கதை எழுத சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைக்க, சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்யும் ஐராவிற்கு எடிட்டிங் செய்கிறார் கார்த்திக் ஜோகேஷ். தாமரை, மதன் கார்கி, கு.கார்த்திக் ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள். நயன்தாராவின் 'அறம்' படத்தைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.